செப் 17, திராவிடர் தலைவர் பெரியாரின் பிறந்த நாள். இன்று பலருக்கும்
பெரியார் என்றால், ‘பார்ப்பனரை பழிப்பவர்’, ‘நாத்திகர்’, ‘திராவிடக்
கட்சிகளின் மூலமான திராவிடர் கழகத்தை நிறுவியவர்’ என்பதைத் தவிர வேறு
எதுவும் தெரியாது. பெரியாரின் அரசியலும், தொண்டும் இவைகளைத் தாண்டியது.
இதைத் தெரிந்துகொள்ள பெரியாருக்கு முன் இருந்த தமிழகத்தைப் பற்றி
தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பெரியாரின் பாதிப்புகள் தமிழகத்தின்
அரசியலிலும், சமூகத்திலும் எவ்வளவு எனப் புரிந்துகொள்ள முடியும். பல சிறந்த
நூல்கள் உள்ளன. முகப்புத்தகத்துக்கு ஒதுக்கும் நேரத்தில் 1 சதவீத நேரம்
போதும் இவரைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள.
3% பார்ப்பனர்கள் அரசு வேலைகளிலும், மேற்படிப்புகளிலும் ஆதிக்கம்
செலுத்தியதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் குரல் கொடுத்து, இட
ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தவர்கள் பெரியாரும், அவர்
வழித்தோன்றல்களும்தான்.
இந்தியாவிலே தமிழர்கள் மட்டும்தான் சாதிப்பெயரை தனது பெயருடன்
சேர்க்காமலிருக்கும் தைரியத்தை பெற்றிருக்கின்றனர். இதைப் பெருமையாக வேறு
மாநில மக்களிடம் கூறும் பலருக்கும் (சில பார்ப்பனர்கள் கூட), இது
பெரியாரினால் நடந்தது என்பது தெரிவதில்லை.
பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே நுழைவதற்கு நேரடியாகவோ
மறைமுகமாகவோ பெரியாரின் போராட்டங்கள் உதவியிருக்கின்றன. பார்ப்பன ஆதிக்க
நீதித்துறை இல்லாமலிருந்திருந்தால், கருவறைக்குள்ளும் பலர் நுழைந்திருக்க
முடியும். விரைவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கருவறைக்குள்
நுழைவார்கள் என நம்புகிறேன்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திராவிடர் இயக்கத்தின் பங்கைப் பற்றி
நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்று ஏதோ இந்தப் போராட்டத்தால் தங்களது
வாழ்வே போனது போல் புலம்பிக்கொண்டு இருக்கும் பலரும், இந்த போராட்டம்
நடக்கவில்லையென்றால் தமிழருக்கான அடையாளத்தை இழந்திருப்போம் என்பதையும்,
இந்தி இல்லாத்தால்தான் தமிழர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குகின்றனர்
என்பதையும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்
இங்கே அலுவலகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நான் பேசினால் என்னை ஏதோ
ஒரு பிற்போக்குவாதி போல் பார்க்கும் பலரும், இட ஒதுக்கீடு இல்லையென்றால்
இன்றும் அவர்களின் தந்தை தொழிலைத்தான் செய்துகொண்டிருந்திருப்பர் என்பதை
மறந்துவிடுகின்றனர். இவர்களெல்லாம் பெரியாரின் காலத்திற்கு கூட
செல்லவேண்டியதில்லை. சற்றே கர்நாடகப் பக்கம் வந்து பார்க்கட்டும். என்னுடன்
பணிபுரியும் 10 கன்னடர்களில் 9பேர் பார்ப்பனர் மற்றும் இதர மேல்
சாதியினர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தேடித்தான்
காணவேண்டியுள்ளது இங்கே.
நேற்றைக்கு அரசியலுக்கு வந்த பலரும் பெரியாரை கன்னடர் என்றும்,
திராவிடர் அரசியலால்தான் தமிழர்களுக்கு எல்லாம் போனதாகவும் புலம்புவது
வேடிக்கையாக இருக்கிறது. இதையெல்லாம் விடக் கொடுமை, ‘இந்தியை கற்கவேண்டியது
காலத்தின் கட்டாயம்’ என முழங்கிய மபொசி போன்றோரை இவர்கள் தமிழர்களின்
தலைவர் என சொல்லுவதுதான்.
பெரியாரைப் பற்றி யார் என்ன சொன்னால் என்ன, பெரியார் அழிக்கமுடியாத ஒரு
பிம்பம். அவரின் நடவடிக்ககள் தமிழக மக்களிடையே உண்டாக்கிய தாக்கங்கள்
அப்படி. எனவே இது போன்றோரின் பேச்சுகளூக்கும் செயல்களுக்கும் பதிலடி
கொடுப்பதை விடுத்து பெரியாரின் சீர்திருத்தங்கள் பலவும் தமிழர்களின்
நடைமுறை வழக்காக மாறும் நாளை நோக்கி பிரயாணிப்போம். அதுதான் அவருக்கு
செய்யும் உண்மையான மரியாதை. தமிழகத்தில் புற்றீசல் போல சாதிக்கட்சிகள்
முளைத்து மறைமுகப் பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிக்கும் இந்த காலத்தில்
இதுதான் மிகவும் முக்கியமானப் பணி.